உடலுக்குத் தேவையான சத்துணவு
தற்காலத்தில் மனிதரின் உணவு முறைகள் வெகுவாக மாறிவிட்டன. 'ஃபாஸ்ட் ஃபுட், பீட்சா, பர்கர்' என்றெல்லாம் உணவு வகைகள் மாறிவிட்டன. இவ்வுணவு உண்பதற்குச் சுவையாக இருக்கலாம். ஆனால், உடல் வலிமைபெற இவ்வுணவு வகைகள் உதவாது.
உணவுகளின் வகைகள் மற்றும் சத்துகள் :
நாம் உண்ணும் சுத்தமான உணவுப் பொருள்கள் வழியாகவே சத்துகள் உடலில் சேர்கின்றன.
- ஈரல், இறைச்சி, கீரை வகைகள், காரட், அவரை நம் உடலுக்கான இரும்புச் சத்தை வழங்குகின்றன.
- பால், பருப்பு, பயறு, முட்டை, அவரை ஆகியவை புரதச் சந்தைத் தருகின்றன.
- மீன் வகைகள், கீரை வகைகள், பால் முதலியவை கால்சியம் சத்தைத் தருகின்றன.) x
- அயோடின் சத்து அடங்கியுள்ள உணவு வகைகள், அயோடின் கலந்த உப்பு, கடல் உப்பு ஆகியவை அயோடின் சத்தைத் தருகின்றன.
- முட்டை, இறைச்சி, பால், வெள்ளைப்பூண்டு ஆகியவை பாஸ்பரஸ் சத்தைத் தருகின்றன.
- உப்பு, முட்டை, இறைச்சி, பால் ஆகியவை சோடியம் சத்தைத் தருகின்றன.
- இவை தவிர, முட்டையின் மஞ்சள் கரு, பச்சைக்கீரை, வெண்ணெய், மஞ்சள் நிறப்பழங்கள், வாழைப்பழம், தவிடு நீக்கா அரிசி, கடலை, நெல்லிக்காய், பப்பாளி, எலுமிச்சைப்பழம், வெண்டைக்காய்,கொய்யா, மீன் எண்ணெய், நல்லெண்ணெய், முளைவிடும் தானியங்கள் ஆகியவற்றில் பல்வேறு வைட்டமின் சத்துகள் நிரம்பியுள்ளன.
இதுபோன்ற சத்துள்ள உணவு வகைகளையும், உணவுப் பழக்கங்களையும் நாம் கையாளும்போது, நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தங்கு தடையின்றிக் கிடைக்கின்றன.
அற்றால் அளவறிந்து உண்க அஃது உடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு. (குறள். 943)
என்று தெய்வத்திருமறை எடுத்தியம்புகிறது.
நாம் முன்பு உண்ட உணவு செரித்தபிறகு. செரிக்கும் அளவை அறிந்து உண்ண வேண்டும். அவ்வாறு உண்பது நீண்டநாள் வாழ வழிவகுக்கும் என்பதே இக்குறள் நமக்குக் கற்றுத்தரும் பாடம் ஆகும்.
நாம் உண்ணும் உணவும், எண்ணும் எண்ணங்களும் நலம் பயப்பவை என்றால், நிச்சயம் நாமும் வாழ்வோம்! நம் சந்ததியும் வளம்பெறும்!