படிக்கும் மாணவர்கள் அனைவரும் எப்படி வாசிப்பது? எப்படி சரளமாக படிப்பது? எப்படி வகுப்பில் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது என்பது குறித்து நிறைய கவலைப்படுகிறார்கள்.
அவர்களுக்காகவே எளிதாக படிக்க வாசிக்க 16 வழிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
![]() |
study tips |
படித்தல் எளியதாக அமைய
- வகுப்பறையில் ஆசிரியர் பாடத்தை விளக்கும்போது நன்கு கவனிக்க வேண்டும். தெளிவாகக் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஆசிரியர் பாடப்பகுதியை எடுத்து முடித்ததும், பாடப்பகுதி முழுவதையும் தெளிவாக வாசித்து, புரியாத பகுதிகளுக்கு விளக்கம் கேட்க வேண்டும்.
- கடினமான பாடப்பகுதிகளை அடையாளம்கண்டு, அதைப் பல பகுதிகளாகப் பிரித்து, எளிமையாக்கிப் படிக்க முயற்சிசெய்ய வேண்டும்.
- முன்னால் கற்றவற்றுடன் அல்லது தனக்குத் தெரிந்த எடுத்துக்காட்டுகளுடன் படிப்பவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, புரிந்து படிக்க முயலவேண்டும். ஏனெனில், அதுதான் நீண்ட நாள்கள் நினைவில் நிற்கும்.
- இடைவெளி இல்லாமல் படிப்பதை விடுத்து, சிறிது நேரம் ஓய்விற்காக ஒதுக்குங்கள். ஒரு பாடத்திற்கு ஒரு மணிநேரம் என்ற அளவில் கால அட்டவணை இடுங்கள்.
- 'பிறகு படிக்கலாம்' என்று தள்ளிப் போடாதீர்கள். கடினப் பகுதிகளை, பாடங்களை ஒதுக்காதீர்கள்.
- தினமும் படியுங்கள். அதனால் பாடச்சுமை குறையும்.
- பொழுதுபோக்குகள் அவசியம் தேவை.ஆனால்,அவை அளவுகடந்து போகும்போது படிப்பு பாதிக்கப்படுகிறது.
- இரவு நேரத்தில் படிப்பது நமது வழக்கம். ஆனால் விடுமுறை நாள்களில் பகலில் படிப்பதே சிறந்தது.இயற்கை ஒளியில் படிப்பதால் மனம் அடிக்கடி அலைபாய்வதில்லை.
- வாய்ப்புக் கிடைக்கும்போது, பாடத்தோடு தொடர்புடைய வேறு சில நூல்களை நூலகத்திலிருந்து எடுத்து வாசிப்பது, அறிவை மேம்படுத்தும்.
- ஒரே இடத்தில் உட்கார்ந்து படிப்பதற்கு தேவையான எல்லா பொருட்களும் உன்னைச் சுற்றி இருக்க வேண்டும்.அடிக்கடி எழுந்து நடப்பது சிந்தனையை ஒருமுகப்படுத்த உதவாது.
- பாடப்பகுதியை வாசிக்கும்போது முக்கிய பெயர்கள், இடங்கள், வார்த்தைகளை அடிக்கோடு இட்டு வைப்பது தேர்வு நேரத்தில் உதவியாக இருக்கும்.
- கடினமான பாடப்பகுதியை எளிமைப்படுத்தி, குறிப்பெடுத்து வைப்பது தேர்வு நேரத்தில் உதவியாக இருக்கும்.
- எந்தெந்த பாடங்களிலிருந்து நெடுவினாக்களை எழுதப் போகிறோம் என்பதைத் தீர்மானித்து, அந்தப் பாடத்திலுள்ள நெடுவினாக்களை எழுதிப் பார்ப்பது தேர்வில் வெற்றிபெற உதவியாக இருக்கும்.
- தேர்வு நேரங்களில் கடின வேலைகள், அலைச்சல், மிதமிஞ்சிய பொழுதுபோக்கு ஆகியவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.
- ஓய்வு, மெல்லிசை, அமைதியாகச் சிந்தித்தல் போன்றவை மனதை ஒருமுகப்படுத்த உதவும்.