குடிநோய்க்கான மருத்துவ சிகிச்சை
இக்குடிநோய் நிரந்தரமானது, குணப்படுத்த முடியாதது. ஆனால், கட்டுப்படுத்த இயலும், இதற்கு சிகிச்சை இருக்கின்றது. மறுத்தல் என்ற தன்மை குடிநோயாளியிடம் இருப்பதால், அவர் சிகிச்சைக்கு வர மறுப்பார்.
குடிநோயாளியை சிகிச்சைக்குக் கொண்டு வருவது எப்படி?
குடிநோயாளியை ஒரு 'நோயாளி'யாகப் பார்க்க வேண்டும்.
குடிநோயாளியை அவரது நண்பரோ, குடும்பத்தினரோ, உறவினரோ, அக்கறையுள்ளவரோ, குறிப்பாகக் குடியை நிறுத்தியவரோ அவரிடம் பேசிச் சிகிச்சைக்குச் சம்மதிக்க வைக்கலாம்.
அவர் குடிக்காமல் நிதானமாக இருக்கும்போது, சிகிச்சை பற்றி இதமாகக் கூறவேண்டும்.
நாம் அவர் மீது அன்பும், அக்கறையும் கொண்டிருக்கிறோம் என்பதை உணரும் வகையிலும், அவர் ஒரு நோயாளி என்ற உணர்விலும் பேசிச் சம்மதிக்க வைக்க வேண்டும்.
அவர் ஒரு நல்ல மனிதர் என்ற மதிப்போடும், மாண்போடும் அவரை அணுகவேண்டும். அவரை மிரட்டுவதோ, மட்டம் தட்டுவதோ கூடாது.
அவரது சிகிச்சைக்கு முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்த பிறகே அவரைச் சிகிச்சைக்கு அழைக்க வேண்டும். அவர் திடீரென சிகிச்சைக்கு ஒத்துக்கொள்ளக் கூடும்.
அவரைச் சிகிச்சைக்குச் சம்மதிக்க வைக்கும் முயற்சி, கூட்டு முயற்சியாக இருப்பின் நல்ல பலன் கிட்டும்.
சிகிச்சைக்குப் பின் செய்ய வேண்டியவை
சிகிச்சைக்குப் பின் தொடர் பராமரிப்பு அவசியம்.
இதில் உடல் நோய்களுக்கான சிகிச்சை, மன நலத்திற்கான சிகிச்சை, மனவளப் பயிற்சிகள், ஆற்றுப்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பராமரிப்பு தேவை.
பாதிப்பைப் பொறுத்துச் சிலருக்கு நீண்டநாள் சிகிச்சை தேவைப்படும்.
குடிநோயாளி ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (Alcoholics Anonymous) என்ற 'குடியை தவிர்த்து வாழ விரும்புவோரின்' தோழமைக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். அது கற்பிக்கும் 12 வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அவருடைய குடும்பத்தினரில் மனைவி ஆல்-அனான் (AI-Anon) கூட்டத்திலும், குழந்தைகள் அலட்டீன் (Alateen) கூட்டத்திலும் பங்கேற்று மகிழ்ச்சியான, பயனுள்ள வாழ்க்கை வாழலாம்.
குடும்பத்திலும், அவர் வாழும் இடத்திலும் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை இருக்க வேண்டும். ஏனென்றால் குடிநோயாளி சிகிச்சை மையத்தில் 20 சதவீதம் நலம் மட்டுமே பெறுகிறார். 80 சதவீத நலனை அவர் குடும்பத்திலும், தான் வாழும் சூழ்நிலையிலும் பெறுகிறார்.
ஒருவேளை குடிநோயாளி சிகிச்சைக்குப் பின்பும் மறுவீழ்ச்சி (மீண்டும் குடித்தல்) அடைந்தாலும் அவரை வெறுக்காமல், அன்போடு மீண்டும் சிகிச்சைக்கோ. ஆல் அனான், அலட்டீன் கூட்டங்களுக்கோ அழைத்துச்செல்ல வேண்டும். அவ்வாறு செய்யும்போது குடிநோயாளி குடியற்ற, மகிழ்ச்சியான, பயனுள்ள வாழ்க்கையை மீண்டும் வாழலாம்.