சுவடிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? tamil traditonal oolaisuvadi history

Admin
0

இளம் பிள்ளைகளுக்கு உபாத்தியாயர் ஓலையை வாரி ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கயிறு கோத்துத் தருவார். ஒரு துளையிடுவதும் இரண்டு துளையிடுவதும் உண்டு. மற்றப் பிள்ளைகள் தாங்களே செய்து கொள்ளுவார்கள். பனையேடு, சீதாள பத்திரம் முதலியவற்றில் எழுதுவது வழக்கம்.

மேலே சட்டமாகப் பனைமட்டையின் காம்பை நறுக்கிக் கோர்ப்பார்கள்; மரச் சட்டங்களையும் அமைப்பார்கள்; செப்புத் தகட்டாலும் சட்டஞ் செய்து கோர்ப்பார்கள். அந்தச் சட்டங்களின் மேல் வர்ண மையினாற் பல வகையான சித்திரங்கள் எழுதுவதுண்டு. 

இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக் கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகித் கட்டுவார்கள். அதற்கு 'நாராசம்' என்று பெயர்.

சுவடியைக் கோக்கும் கயிற்றின் ஒரு தலைப்பில் தடையாக, பனையோலையை ஈர்க்கோடு கிளிமூக்குப் போலக் கத்தரித்து அமைப்பார்கள். அதற்குக் கிளிமூக்கென்று பெயர்.

இப்போது அச்சுப் புத்தகங்களின் அளவில் எவ்வளவு வேறுபாடுகள் உண்டோ அவ்வளவு பனையோலைச் சுவடிகளிலும் உண்டு.

எழுத்தாணிகள் :

ஓலையில் எழுதுவதற்குரிய எழுத்தாணியில் பல பேதங்கள் உண்டு. எழுத்தாணியை ஊசியென்றும் கூறுவதுண்டு. மடக்கெழுத்தாணி, வாரெழுத்தாணி, குண்டெழுத்தாணி என்பன எழுத்தாணியின் வகைகள். ஒரு பக்கம் வாருவதற்குக் கத்தியும் மறுபக்கம் எழுதுவதற்கு எழுத்தாணியும் அமைந்ததைப் பார்த்தே பேனாக்கத்தி என்ற பெயர் வந்ததென்று தோற்றுகின்றது.

ஒரு பக்கத்தில் இரண்டு கத்தியும் ஒரு பக்கம் இரண்டு எழுத்தாணியும் உள்ள மடக்கெழுத்தாணிகளும் இருந்தன.

ஏடெழுதும் வழக்கம் :

ஒரு பக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துக்களாக இருபது முப்பது வரி வரையில் எழுதுவதற்குரிய மெல்லிய எழுத்தாணிகள் இருந்தன. நாம் இக்காலத்தில் காகிதத்தில் எழுதுவதைப் போன்ற வேகத்தோடே ஏட்டில் எழுதுவதுண்டு.

 மாணாக்கர்களுக்கு எழுதும் பழக்கம் நன்றாக உண்டாகவேண்டுமென்று ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களைத் தனித்தனியே ஏடுகளில் தாம் மேலே எழுதி அதைப்போல் எழுதிவரச் சொல்வார்கள். இதற்குச் சட்டமென்று பெயர்.

சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவிக்குத் தூக்கு என்று பெயர். அதனை அசை என்றும் சொல்வதுண்டு.

அன்பினால் அடக்குதல் :

முற்காலத்தில் கொடிய தண்டனைகள் இல்லை. ஆசிரியர்கள் மாணாக்கர்களை அன்பினால் வழிப்படுத்தி வந்தார்கள். அவர்கள்பால் இருந்த மரியாதை மாணாக்கர்களுக்குப் பயத்தை உண்டாக்கியது. பிழைகளை மறந்தும் புரியாத நிலையில் அவர்கள் இருந்தனர்.

வாதம் புரிதல் :

கல்வியில் வாதம் செய்தல் நம் நாட்டுப் பள்ளிக்கூடங்களில் இருந்தது. மிகச் சிறந்த நூற்பயிற்சியுடையவர்கள் அரசவைகளில் வாது புரிந்து தம் கல்வித் திறமையை நிலைநாட்டுவர். அதன் பொருட்டு அவர்கள் கொடிகட்டியிருப்பரென்று மதுரைக்காஞ்சி முதலிய நூல்களால் அறிகிறோம்.

இந்த வாதம்புரியும் பழக்கம் பாடசாலைகளிலிருந்தே வளர்ச்சியுற்று வந்தது. பள்ளிக்கூடத்தில் மாணாக்கன் நூல்பயிலும் இயல்பை விளக்க வந்த பழைய சூத்திரமொன்று பலவற்றைச் சொல்லிவிட்டு,

"வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடநனி இருக்கும்"

                                            -நன்னூல் 41

என்று முடிக்கின்றது. ஆட்சேப சமாதானங்கள் சொல்லிப் பழகிய பழக்கங்களே முதிர்ந்த நிலையில் வாதங்களாக வளர்ச்சியுறுகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top