நினைவாற்றலை உணர்த்தும் அருமையான கதை | Power Of Memory Mind

Admin
0

தென்புறம் என்றோர் அழகிய கிராமத்தில் ராஜதுரை எனும் பண்ணையார் இருந்தார். அவரது மகனின் பெயர் அருண். அருணின் வகுப்புத் தோழன் ராஜா. இருவரும் பத்தாம் வகுப்பில் சேர்ந்து படித்தார்கள். ராஜாவின் தந்தை முத்தையா. பண்ணையார் ராஜதுரையின் தோட்டத்தில் வேலை செய்துவந்தார்.

காலாண்டுத் தேர்வில் ராஜா முதல் மதிப்பெண் பெற்றதை அறிந்து, பண்ணையார் பொறாமை கொண்டார். ஆகவே அவர் முத்தையாவை அழைத்து. "உன் மகனுக்கு என்ன சாப்பாடு கொடுக்கின்றாய்? அவன் வகுப்பில் முதலிடத்தில் இருக்கிறானாமே!" என்று கேட்டார்.

அதற்கு முத்தையா. "ஐயா, நீங்கள் எனக்குச் சம்பளமாக கொடுக்கும் உங்கள் வயலில் விளையும் தானியங்களும், காய்கறிகளும், கீரையும்தான்" என்று பணிவாகக் கூறினார். கோபம் கொண்ட பண்ணையார், "இனி நீ என் வயலில் உள்ள தானியப் பயிர்கள், காய்கறி, கீரைகள் எதையும் உன் வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. கூலியாகப் பணம் மட்டும் பெற்றுக் கொள்" என்று கட்டளையிட்டார்.

பண்ணையார் தன் மகன் அருணுக்கு தன் தோட்டத்தில் விளைந்த தானியங்களையும், காய்கறிகளையும், கீரையையும் அதிகமாகக் கொடுத்துப் பார்த்தார். ஆனால், அவன் படிப்பில் சிறிதும் முன்னேறவில்லை.

ஏனென்றால் அருணிடம் ஒரு கணினி இருந்தது. எப்போதும் அதில் ;வீடியோ கேம்ஸ்'. சமூக வலைத்தளங்கள் என அவன் நேரத்தை வீணாக்கியதால், தன் பாடப் புத்தகங்களைச் சுமையாக நினைத்தான். கவனமில்லாமல் படித்துக் கொண்டிருந்தான்.

சில மாதங்களுக்கு பிறகு, அரையாண்டுத் தேர்வுகள் வந்தன. ராஜா தேர்வுகளை அமைதியாக எழுதிக்கொண்டிருந்தான். ஆனால். அருணுக்குப் படித்தவை எதுவும் நினைவிற்கு வரவில்லை. பெரும்பாலான கேள்விகளுக்கான பதில்கள் பாதியிலே மறந்து போயின. தேர்வறையிலே அழ ஆரம்பித்து விட்டான்.

இதைக் கண்ட ராஜா அருணுக்கு உதவ முன்வந்தான். அவன் அருணை தனியே அழைத்து, "நம் அனைவருக்கும் போதுமான நினைவாற்றலை கடவுள் தந்திருக்கின்றார். நாம் அதை முறையாகப் பயன்படுத்தினால் வெற்றிதான்" என்று கூறி. பாடத்தை நினைவில்கொள்ள கடைப்பிடிக்கும் முறைகளை அவனுக்குச் சொல்லிக்கொடுத்தான்.

அடுத்த இரண்டு மாதங்களில் அருணின் நினைவாற்றலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நம்பிக்கையோடு அரசுப் பொதுத்தேர்வுக்குத் தயாரானான். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றியும் பெற்றான்.

தான் பொறாமையால் முத்தையாவை வஞ்சித்தாலும், அவர் மகன் ராஜா அருணுக்கு உதவியதை நினைத்துப் பண்ணையார் மனம் நெகிழ்ந்தார். தன் தவறுக்காக வருந்தினார். மகிழ்ச்சியோடு முத்தையாவை, தன் பண்ணை முழுவதற்கும் கண்காணிப்பாளராக மாற்றினார். ராஜாவின் மேற்படிப்புக்கான செலவையும் ஏற்றுக்கொண்டார். இரு குடும்பங்களும் மகிழ்ந்தன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
To Top