1.குடிநோய் ஒரு நிரந்தரமான நோய்
ஒருவர் குடிநோயாளி ஆனபிறகு இதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஒருவர் குடிநோயாளி ஆனபிறகு வாழ்நாள் முழுவதும் குடிநோயாளியே என்பது அதிர்ச்சிகர உண்மை.
மது மூளையில் THIQ∙-என்ற இரசாயன மாற்றத்தை உருவாக்கி, அந்த இரசாயனப் பொருள் மூளையில் நிரந்தரமாக ஆதிக்கம் செலுத்தக் காரணமாகின்றது.
2. குடிநோய் ஒரு வளரும் நோய்
இது ஆரம்பக்கட்டம். நடுக்கட்டம், இறுதிக்கட்டம் என்ற நிலைகளில் வளரும் நோய்.
ஆரம்ப நிலை
ஆரம்பக்கட்டத்தில் மறதிநிலை, ஒளிந்திருந்து குடித்தல், மதுவை 'மடக் மடக்' என வேகமாகக் குடித்தல், மீண்டும் மீண்டும் மறதிநிலை மற்றும் பகலிலும் குடித்தல் போன்றவை அறிகுறிகள்.
நடுநிலை
நடுக்கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து அதிகமாகக் குடித்தல், தனிமையில் குடித்தல், வன்முறைகளில் ஈடுபடுதல், தாழ்வுமனப்பான்மை கொள்ளுதல், வேலை இழப்பு, ப்பு, மது அருந்தும் பாணியை மாற்றுதல், சிறிதுகாலம் குடிக்காமலிருத்தல் போன்றவை அறிகுறிகள்.
இறுதிநிலை
இறுதிக்கட்டத்தில் விட்டு விட்டுக் குடித்தல், ஒழுக்கம் தவறுதல், வீண் சந்தேகம், மனப்பிரமைகள் தொற்றுதல்,உடல் உறுப்புகள் கட்டுப்பாட்டை இழத்தல் போன்றவை அறிகுறிகள்,
இன்னும் தொடர்ந்து குடித்துக்கொண்டே இருந்தாலோ, மருத்துவச் சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்தாலோ, அவர் மனநோயாளி ஆகலாம் அல்லது மரணமடையலாம்.
3. குடிநோயைக் குணப்படுத்த முடியாது
குடிநோயைக் குணப்படுத்த மருந்துக்கள் இல்லை. ஆனால், இதனைக் கட்டுப்படுத்தலாம். எவ்வாறு சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாதோ, இதுவும் அதேபோல்தான். ஆனால், குடியை நிறுத்தி மதுவற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்.
4. இது யாரையும் விட்டு வைக்காத நோய்
இது பரவலாகக் காணப்படும் நோய் என்று சொல்லலாம். ஏனென்றால் இது ஆண் - பெண், இனம், மொழி, உயர்ந்தோர் -தாழ்ந்தோர், படித்தோர் - படிக்காதோர், சிறியோர் - பெரியோர். இளையோர் - மூத்தோர், ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி, குடிப்பவர்களை ஆட்கொள்ளும் நோய்.
குடிப்பவர்களில் 10 - 20 சதவீதத்தினர் குடிநோயாளிகளாகி விடுகின்றனர். ஆகையால் குடிப்பவர்கள் யாருமே, தான் ஒரு குடிநோயாளி ஆகப்போவதில்லை என அறுதியிட்டுச் சொல்ல முடியாது.