மூச்சுப் பயிற்சிகளும், உடற்பயிற்சிகளும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக அளவில் உதவுகின்றன.
உடலில் உள்ள அனைத்து மண்டலங்களும், உடல் உறுப்புகளும், தேவையான உயிர்ச் சக்தியைப் பெற்று இயங்குவதற்கு மிக அவசியமாக இருப்பது மூச்சுப்பயிற்சி. இதை யோகாசனப் பயிற்சியில் பிராணயாமம் என்று சொல்வார்கள்.
பிராண + இயமம் என்றால் உடலுக்குத் தேவையான உயிர்க்காற்று, சக்தியை அளிக்கும் ஒழுக்க நெறி ஆகும். பிராண சக்தி என்பது உடலுக்கும், உயிருக்கும் ஆன மின்சக்தி என்றும் பொருள் கொள்ளலாம்.
நாம் உண்ணும் உணவின் மூலமும், சுவாசத்தின் மூலமும் கிடைக்கும் பிராண சக்தியை வைத்தே நாம் உயிர் வாழ்கிறோம். இந்தப் பிராண சக்தி நம்முள் குறைகின்றபோது, அது நோய்க்கு வித்திடுகிறது.
சித்தர்கள் இந்தப் பிராணயாமக் கலையை 'சரப்பயிற்சி' என்று அழைக்கிறார்கள்) இந்தச் சரப்பயிற்சியின் மூலம் நாடி நரம்புகளைச் சுத்தம் செய்து, பிராண சக்தியை உடலில் தேக்கி, முழுமையான ஆரோக்கியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சரப்பயிற்சியின் பயன்கள் :
- சரப்பயிற்சியை முறையாகச் செய்வதன் மூலம் நாடி நரம்புகள் சுத்தமாகும்.
- நரம்பு மண்டலம் வலுவடையும்.
- இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரக உறுப்புகள் நன்கு இயங்கும்.
- மனதில் அழுத்தம் குறையும்.
- உடல் எடை குறையும்.
- மனம் அலைபாயும் தன்மையை விடுத்து, கட்டுக்குள் அடங்கும்.
- இதனால் நாம் திட்டமிடும் செயல்களைச் சரிவரச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.
நாம் ஒருநாளில் 21,600 முறை சுவாசிக்கிறோம். இதில் 7,200 சுவாசங்கள் வெறுமனே வீணாக்கப்படுகின்றன. நாம் அவற்றை விரயம் செய்கின்றோம். இவ்வாறு விரயமாகும் பிராண சக்தியை பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) மூலம் சேமித்தால் நல்வாழ்வுக்கு சிறப்பான அடித்தளத்தை நாம் அமைத்துக்கொள்கிறோம் என்று சொல்லலாம்.